உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Supreme Court Order Today- டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-04 03:26 GMT
எடப்பாடி பழனிசாமி.

Supreme Court Order Today- தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.  இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீதான ரூ 4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இனி தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கும். இதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை தரும் என கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அப்போது தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தமது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை டெண்டர்களை சட்டவிரோதமாக வழங்கி உள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த தி.மு.க. மூத்த தலைவர் ஆ.ராசா, எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தி.மு.க. கோரியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது என கூறியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவும் அப்போது வலியுறுத்தி இருந்தார் ஆ.ராசா.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பின்னர் இந்த வழக்கு அப்படியே 4 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி நிம்மதியாக இருந்தார்.

இதனால் இவ்வழக்கை விசாரிக்க கோரி தமிழக அரசு தரப்பிலும் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அத்துடன் இவ்வழக்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கலாம்; இந்த விசாரணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றமே வழக்கை தொடர்ந்து விசாரித்து உத்தரவிடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கில் தி.மு.க. தொடக்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத்தான் கேட்டது. சென்னை உயர்நீதிமன்றம்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு தடை வாங்கி சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்திருக்கிறது. அத்துடன் நிற்காமல் தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையே இனி விசாரிக்கும்; இந்த விசாரணையை அடிப்படையாக வைத்தே சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைகளை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டிருக்கிறது. 4 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இனி தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தப் போகும் விசாரணை மிகக் கடும் நெருக்கடியாகவே இருக்கும் என்றே கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News