5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று: திருப்போரூர் காவல் நிலையம் மூடல்!

5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து திருப்போரூர் காவல் நிலையம் மூடப்பட்டது.

Update: 2021-05-26 15:08 GMT

திருப்போரூர் காவல் நிலையம்.

தமிழகத்திலேயே வைரஸ் தொற்றின் பாதிப்பு சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், உளவுத் துறை காவலர் உட்பட 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சுகாதாரத் துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் வந்து கிருமிநாசினி தெளித்த பிறகு, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சக காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News