மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.

Update: 2023-12-25 13:28 GMT

மாமல்லபுரம் - கோப்புப்படம் 

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

அதன்படி, மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டினர்

Tags:    

Similar News