கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-06 15:39 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியபிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிவரை (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை (7ந் தேதி), நாளை மறுநாள் (8ந் தேதி)  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு(சென்டிமீட்டரில்):

திருமயம் (புதுக்கோட்டை) 19, லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 9, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பந்தலூர் (நீலகிரி) தலா 8, தொழுதூர் (கடலூர்), நெய்வேலி (கடலூர்), சோத்துப்பாறை (தேனி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 7, பெரியாறு (தேனி), காட்பாடி (வேலூர் ), மண்ணூர்பேட் (கள்ளக்குறிச்சி) தலா 6 , எறையூர் (பெரம்பலூர்), திருவையாறு (தஞ்சாவூர்) , செஞ்சி (விழுப்புரம்) , கிருஷ்ணகிரி , மோகனுர் (நாமக்கல்) தலா 5 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

நாளை மறுநாள் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 9ந் தேதியும் 10ந் தேதியும் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News