சேலத்தில் நீதிபதியை உதவியாளர் கொல்ல முயன்றது ஏன்? பரபரப்பு தகவல்

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4வது நீதிமன்ற நீதிபதிக்கு கத்திக்குத்து. அலுவலக உதவியாளர் வெறிச்செயலால் பரபரப்பு.

Update: 2022-03-01 07:00 GMT

நீதிபதி பொன்பாண்டி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். இன்று காலை, வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த பொன்பாண்டியிடம்,  அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், தன்னை பணி மாறுதல் செய்தது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, நீதிபதிக்கும் அலுவலக உதவியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ்,  திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து,  நீதிபதியை குத்த முயன்றுள்ளார். அப்போது நீதிபதி தடுத்தால் மார்பில் மட்டும் சிறிய கீறல் விழுந்துள்ளது.

இதனையடுத்து  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிரகசை பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக நீதிபதியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது,  நீதிபதி பொன்பாண்டி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலுவலக உதவியாளர் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் நீதிபதியிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில்,  அவர் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News