சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி மா.கம்யூனிஸ்ட் கட்சி மனு
அரியலூர் நகராட்சி பொறியாளரிடம் சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு.;
சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் நகராட்சி பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சொத்துவரி உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு மாநில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்கிற போது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எதுவும் விதிக்க கூடாது. ஆனால் தற்போதைய ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்துவரியை உள்ளாட்சி அமைப்புகள் தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற நகரங்களில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்க கூடிய மதிப்பும் வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது. வளர்ந்த பகுதிகளுக்கும் வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
அரியலூர் நகரில் 70 சதவீதம் ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில்வசிப்பவர்கள். வீட்டு வரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதே போல் பல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது. எனவே தாங்கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. CPIM செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்டக்குழு துரைசாமி, மலர்கொடி, அருண்பாண்டியன், ஒன்றிய செயலாளர் துரை.அருணன், மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.