ஓமன் நாட்டில் தமிழர் கடத்தல்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-11-21 11:59 GMT

பைல் படம்

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வெளியுறவுத் துறை அமைச்ச ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு இன்று (21-11-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில்,  பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், பெத்தாலிஸ் அவர்களை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸ் மனைவி  ஷோபா ராணிகோரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஓமன் நாட்டிலுள்ள, இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News