கோத்தகிரி: மரத்தில் ஏறி விளையாடிய கரடி : தேயிலை தொழிலாளர்கள் பீதி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பகுதியில், மரத்தின் மீது ஏறி விளையாடிய கரடியை கண்டு தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.;
மரத்தில் ஏறி விளையாடும் கரடி.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருகின்றன.
தற்போது ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில், பொதுமக்கள் இல்லாமலும், போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுவதால், வனவிலங்குகள் உற்சாகமடைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் குறைந்ததால், சாலையில் திரிவது என்று, அவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே மூணு ரோடு கிராமப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு ஆச்சரியமும், பீதியும் அமடைந்த தேயிலைப் பறிக்கும் பணியிலிருந்த சிலர், அதை தங்களது மொபைல் போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அரவேனு சுற்று வட்டாரப்பகுதிகளான மூணு ரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, கேசலாடா, ஜக்கனாரை, அளக்கரை உள்ளிட்ட கிராமங்களில், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் அடிக்கடி நடமாடி வந்தாலும் தொழிலாளர்களுக்கு தொந்தரவு அளிப்பதில்லை.
இருப்பினும், கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கரடிகளின் நடமாட்டததை வனத்துறையினர் கண்டறிந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர்.