ஒரே நாடு ஒரே தேர்தலை ரத்து செய்யக்கோரி திருச்சி வி.சி.க. மாநாட்டில் தீர்மானம்

ஒரே நாடு ஒரே தேர்தலை ரத்து செய்யக்கோரி திருச்சி வி.சி.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-01-26 15:44 GMT

திருச்சி சிறுகனூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசிய காட்சி.

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திட வேண்டும் என விசிகவின் 'வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' எனும் தலைப்பிலான மாநாடு இன்று திருச்சி அருகே சிறுகனூர் பகுதியில் நடைபெற்றது. விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான  மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக. சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுக ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுக. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப் பெறுக. ஒப்புகைச் சீட்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்திடுக.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வருக. தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்க. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கில்  தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்துக. உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும். வழக்காடு மொழியாக தமிழை அறிவித்திடுக. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை திரும்பப் பெறுக.

ஆளுநர் பதவியை ஒழித்திடவேணடும், ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதை கைவிடுக. 16-வது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்டுக. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிடுக வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக. அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒத்துக்கீடு வழங்கிடுக. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுக. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க. கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்க.

நீட் தேர்வை ரத்து செய்க, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக பழங்குடியினரைக் கொத்தடிமையில் ஈடுபடுத்துவதைத் தடுத்திடுக வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுக என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News