முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற துரை வைகோ எமோஷனல் ஸ்பீச் வீடியோ

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை வைகோ எமோஷனல் ஆக பேசிய வீடியோ முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Update: 2024-03-25 15:38 GMT

நேற்று தனி சின்னம் குறித்து திருச்சி நாடாளுன்ற தொகுதி மதிமுக  வேட்பாளர் துரை வைகோ பேசியது திமுக வட்டாரத்தில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறதாம். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் முக்கியமான சில புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

தனது கவனத்துக்கு வந்ததுமே, அன்றைய தினம் இரவு சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். எச்சரிக்கை செய்ய வேண்டியவர்களுக்கு எச்சரிக்கையும், கண்டிக்க வேண்டியவர்களுக்கு கண்டிப்பும், கனிவாக பேசப்பட வேண்டியவர்களிடம் கனிவாகவும் என பல்வேறு நவரச முகங்களைக் காட்டுகிறார் ஸ்டாலின்.

திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது. இதில் பேசிய துரை வைகோ மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் ; செத்தாலும் தனி சின்னம் தான். உதய சூரியன் சின்னத்தில் எங்களுக்கு மரியாதை இருக்கிறது என்று ஆவேசமாகப் பேசினார். இதனை மௌனமாகவே கேட்டுக்கொண்டிருந்தார் அமைச்சர் நேரு. உதயசூரியன் சின்னத்தை உயரிய மரியாதையில் அவர் சொல்லியிருந்தாலும் கூட்டத்தில் கலந்துகொண்ட உடன்பிறப்புகள், உதயசூரியனை அவமரியாதை செய்திருப்பதாகவே பேசிக்கொண்டனர். செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என சொல்வது திமுகவை காயப்படுத்தியுள்ளது என்று ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மேலும், துரை வைகோவின் பேச்சின் வீடியோவும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேடையை தட்டி அவர் பேசும் வீடியோவை முழுமையாக பார்த்த ஸ்டாலின், முகம் மாறியது. ஆனாலும் அதனை பெரிதுபடுத்தாமல், அமைச்சர் நேருவை தொடர்புகொண்டு, துரை வைகோவின் பேச்சை விவாதித்துள்ளார்.

நேருவும், சிறு வயசு தானே ; அதனால் கொஞ்சம் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார் என சொல்ல, நம் தொண்டர்கள் வெக்ஸாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.வைகோவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

துரை வைகோவின் இந்த பேச்சு விவகாரம் இத்துடன் அமுங்கி விடுமா அல்லது நீரு பூத்த  நெருப்பாக இருக்குமா? என்பது போக போக தான் தெரியும்.

Tags:    

Similar News