தமிழகத்தில் பிப். 19ல் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2022-01-26 13:00 GMT

தமிழகத்தில், கடந்த 2019 டிசம்பரில், 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. புதியதாக உருவான ராணிப்பேட்டை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 2021 அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில், எஞ்சிய 9 மாவட்டஙகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றன.

இதை தொடர்ந்து, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதனிடையே, கொரோனா 3-வது அலையை காரணம் காட்டி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தேர்தல் ஆணையர் பழனிகுமார், உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார். அதன் விவரம்:

வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 முதல்  பிப்.4, ம் தேதி வரை

வாக்குப்பதிவு : 19.02.22

வேட்பு மனு பரிசீலனை 05.02.22

வேட்பு மனு திரும்ப பெற 07.02.22

வாக்கு எண்ணிக்கை 22.02.22

மார்ச் 2,ம் தேதி புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். மார்ச்  4ல் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரசாரம் உள் அரங்கில் மட்டுமே நடைபெற வேண்டும். பொதுவெளியில் பேரணி நடத்தக்கூடாது. வேட்பாளர் மற்றும் 3பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் . உள் கூட்டங்கள் நடத்துவதற்கு 
300 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 12,838 பதவிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, மொத்தம், 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
Tags:    

Similar News