ஓபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் 'ஐஸ்': நிதானமாக பேசுபவர் என புகழாரம்

ஓ.பி.எஸ். எப்போதும் நிதானமாக பேசுபவர்; சரியான கருத்தை தான் கூறியுள்ளதாக, தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2021-10-27 07:30 GMT

தஞ்சையில், மருது சகோதரர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த டிடிவி.தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகளுக்கும், கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று தஞ்சை அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் வி.கே.சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக,  தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் மருது சகோதரர்களின் திருவுருவ படத்திற்கு, மலர்தூவி மரியாதை செய்த டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருது சகோதரர்கள் வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் பெயர் போனவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் எங்களிடம் உள்ளார்கள்.

எனவே,  இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு என்றும் கூறிய அவர், ஓ.பன்னீர்செல்வம், குறித்து கேட்டதற்கு, ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர், சரியாக பேசியுள்ளார். அவர் சரியான கருத்தைதான் கூறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். மூத்த தலைவர்கள் எடப்பாடி உள்ளிட்ட பலரின் கருத்துக்கு நேர்மாறான கருத்தை  வெளியிட்டு, ஓ.பி.எஸ். சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை புகழ்ந்து டிடிவி தினகரன் பேசியிருப்பது, முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

Similar News