மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறும்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது

Update: 2021-07-19 02:54 GMT

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று 19-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும்.

மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் காலை 11 மணி அளவில் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து உறுப்பினர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம் என ஏற்கனவே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

அவை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் 311 மக்களவை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில உறுப்பினர்கள் கொரோனா அறிகுறி இருந்ததாலும், மருத்துவ காரணங்களாலும் தடுப்பூசி இன்னும் செலுத்தி கொள்ளவில்லை. அதே போல் நாடாளுமன்ற ஊழியர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த நேற்று 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட தொடரில் மத்திய அரசு 29 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News