மத்திய வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பாக்கி ரூ.135 கோடி

மத்திய வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பாக்கி ரூ.135 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-14 14:44 GMT

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் (கோப்பு படம்)

காங்கிரஸ் கட்சி 102 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளது.அத்தொகை வட்டியுடன் சேர்த்து 135 கோடியாக அதிகரித்து உள்ளது. 135 கோடி வரி பாக்கி வசூலிப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு மத்திய வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் காங்கிரஸின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 65 கோடியே 94 லட்சத்தை எடுத்தது.

இந்நிலையில் வருமான வரி துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்தது. ஆனால் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து காங்கிரஸ் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்தது.

அம்மனுவை  நீதிபதிகள் எஸ்வந்த் வர்மா, குரு சைந்தகுமார் கௌரங்கி ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை என்று கூறி ஐகோர்ட் தலையிட மறுத்துவிட்டது. அதே சமயத்தில் வருமானவரித்துறை ஏற்கனவே வருவாயில் 48 சதவீத தொகையான ரூ. 65 கோடி எடுத்திருப்பதால் அதை குறிப்பிட்டு தீர்ப்பாயத்தை மீண்டும் அணுகுமாறு காங்கிரஸ் கட்சியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மனுவை முடித்து வைத்து தீர்ப்பு கூறினார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகம் வருமான வரித்துறைக்கு முறையாக வரி கட்டாமல் இருப்பது பல கேள்விக்கணைகளை எழுப்பி உள்ளது.

Tags:    

Similar News