சீதாராம் யெச்சூரி காலமானார்: உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம்

சீதாராம் யெச்சூரி காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Update: 2024-09-12 13:15 GMT

சீதாராம் யெச்சூரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சீதாராம் யெச்சூரி .வயது 72 .இவர் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி கழகமான எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 3 .05 மணிக்கு சீதாராம் யெச்சூரி காலமானார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். சீதாராம் யெச்சூரி 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் பிறந்தார் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை  பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர் பெயர் சர்வேஸ்வரா சோமையாஜூலு யெச்சூரி, கல்பாகம் யெச்சூரி.

இவரது தந்தை ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் பொறியாளராக இருந்தார். தாயாரும் அரசு அதிகாரி ஆவார். யெச்சூரி தனது பத்தாம் வகுப்பு வரை ஹைதராபாத்தில் உள்ள பள்ளியில் படித்தார். பின்னர் டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். உயர்நிலை தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ பட்டமும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம் ஏ பட்டமும் பெற்றார். நெருக்கடி நிலையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

யெச்சூரி 1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். பின்னர் அடுத்த ஆண்டு அவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் சேர்ந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1984 இல் அவர் மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1992 இல் பொலிட் பீரோவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளரான அவர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.யெச்சூரி சிறந்த எழுத்தாளர். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

யெச்சூரி 2017ல் சிறந்த ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.2005 இல் மேற்குவங்கத்திலிருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2017 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். எச்சூரியின் முதல் மனைவி பெயர் இந்திராணி மஜும்தா. பின்னர் பத்திரிகையாளர் சீமா சிஸ்டியை  திருமணம் செய்துள்ளார்.அவரது மகள் அகிலாய் யெச்சூரி வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆசிரியராக உள்ளார். மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனா காரணமாக 34 வயதில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதாராம் யெச்சூரி இறந்த பின்னர் தனது உடலை தானமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் கற்றல் செயல்களுக்காக அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக காரணமாக வழங்கப்பட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரி மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்வகள் ஸ்டாலின் (தமிழ்நாடு) மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் நிதின் கட்கரி உள்பட மத்திய அமைச்சர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News