பாஜகவில் ஐக்கியமான ச.ம.க: சரத்குமார் அதிரடி

தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இணைத்துள்ளார்

Update: 2024-03-12 08:12 GMT

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? என்பதை இன்று சரத்குமார் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இணைத்துள்ளார். தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை முன்னிலையில் இந்நிகழ்வானது நடைபெற்றது.

இதையடுத்து பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் கோரிக்கை வைப்பது மட்டுமே நமது பாதையா? என யோசித்தேன். நிர்வாகிகளின் ஆதரவை தொடர்ந்து பாஜகவுடன் கட்சியை இணைத்துள்ளோம். இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல, ஒரு எழுச்சியின் தொடக்கம்.

மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைப்பது என முடிவெடுத்துள்ளோம். இதுவரை சமத்துவ மக்கள் கட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று சரத்குமார் கூறினார்.

முன்னதாக பேசிய அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க பா.ஜ.க. விரும்பவில்லை எனக்கூறினார்.

Tags:    

Similar News