எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியல் பற்றி பிரதமர் மோடி கடும் விமர்சனம்

எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியல் பற்றி பிரதமர் மோடி கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

Update: 2023-08-06 14:35 GMT

பிரதமர் மோடி.

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்தியா முழுவதும் இந்த ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா முழுவதும் 1,300 பெரிய ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. அதில் 508 ரயில் நிலையங்கள் இன்று மேம்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.

சாமானிய மக்களுக்கு ரயில்வேத்துறை மிகவும் முக்கியமான துறையாக மாறி விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில தலைநகரங்கள் ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சரக்கு கொண்டு செல்லும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களின் மேம்பாடு சுற்றுலா பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்தது கிடையாது. எதிர்க்கட்சியினர் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள்.

நாடாளுமன்ற கட்டிடம், போர் நினைவகம், குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை போன்றவற்றை கட்டியபோது எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எதிர்மறை அரசியலை கடந்து நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி உள்ளன. இந்த நேரத்தில் பிரதமர் மோடி அரசு விழாவில் இப்படி பேசி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News