2 பாஜ எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவல்? எம்பி செந்தில்குமார் டிவி(ஸ்)ட்

திமுக தலைமை இசைவு தெரிவித்தால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவரை தூக்கிவிடுவோம் என்று, திமுக எம்.பி. செந்தில்குமார் டிவிட் செய்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-05-09 10:15 GMT

செந்தில்குமார் எம்.பி. 

தருமபுரி தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார், சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படுபவர்; அதே நேரம், அவ்வப்பொது சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளை பதிவிடுவார். இச்சூழலில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்ததற்கு பதிலடியாக அவர் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் திமுக எம்.பி செந்தில்குமார் தனது டிவிட்டர் பதிவில், "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர், உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக! உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


தமிழக சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். கோவையில் இருந்து வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து சரஸ்வதி, நெல்லையில் இருந்து நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் இருந்து எம்.ஆர். காந்தி ஆகியோர், பாஜக எம்எல்ஏ-க்களாக உள்ள நிலையில், இவர்களில் யார் திமுகவில் இணைய காத்திருக்கின்றனர் என்ற யூகங்களை கிளப்பி உள்ளது.

இது குறித்து, இணையத்தில் நெட்டிசன்கள் கார சாரமாக கருத்துகளை  பகிர்ந்து வரும் நிலையில், தமிழக பாஜகவிலும், அரசியல் அரங்கிலும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது, இந்த பதிவு.

Tags:    

Similar News