ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-11 12:12 GMT

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இபிஎஸ் தரப்பு வாதம் தொடர்ந்தது. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர், அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை இபிஎஸ் வழி நடத்த வேண்டும் என கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன. ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு வாதிட்டது. .

அத்துடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளும் காலாவதியானதால் அதிமுக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும் விளக்கம் அளித்தது.

ஆனால் நீதிமன்றமோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? என்று கேள்வி எழுப்பியது. ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு கடந்த 2021ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை . இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானது என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News