முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20 வரை நீதிமன்றக்காவல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2022-01-06 03:00 GMT

ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றி விட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதாம் 17ம் தேதி முதல், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இதையடுத்து, 8 தனிப்படைகள் அமைத்து, அவரை தமிழக போலீசார் தேடி வந்தனர். 18 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டை, நேற்று முடிவுக்கு வந்தது. கர்நாடகாவின் ஹசன் பகுதியில், அவர்  நேற்று கைது செய்யப்பட்டார். அவரை நேற்றிரவே போலீசார் விருதுநகருக்கு அழைத்து வந்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு உடனடியாக மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இன்று காலை , ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பாக, ராஜேந்திர பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை, ஜனவரி 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்க, அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே, ராஜேந்திர பாலாஜியை போலீஸ் காவலில் எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல், அவரை ஜாமினில் வெளியே கொண்டு வர அதிமுக வழக்கறிஞர் பிரிவு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News