வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிரான வேட்பாளர் கட்சி மாறப்போவதாக தகவல்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிரான வேட்பாளர் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-10 13:37 GMT

பிரதமர் மோடி மற்றும் கடந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராய்.

வரும் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மீண்டும் அஜய் ராய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அஜய் ராய் காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014, 2019 தேர்தல்களில் ஏற்கனவே வாரணாசியில் வெற்றி பெற்ற நிலையில் 3வது முறையாக அங்கு களமிறங்கி உள்ளார்.

இதையடுத்து வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள அஜய் ராய் ஏற்கனவே 2014, 2019 ல் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கி தோல்வியடைந்தார். தற்போது 3வது முறையாக அவரை காங்கிரஸ் கட்சி வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் அஜய் ராய் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது அஜய் ராய் வரும் லோக்சபா தேர்தலில் பலியா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. பலியா தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி விட்டு கொடுக்க மறுத்ததாகவும், இதையடுத்து தான் அஜய் ராய் மீண்டும் வாரணாசியில் போட்டியிட வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள அஜய் ராய் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் பாஜகவில் இணைவதாக வெளியாகி உள்ள தகவலை அஜய் ராய் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ பாஜக என்பது அரசியல் மற்றும் சமூகத்தை பின்பற்றி எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து கட்சியில் இணைக்கிறது. ஆனால் நான் காங்கிரஸ் தொண்டன். என்றென்றும் நான் அப்படியே தான் இருப்பேன். மதுராவுக்கு சென்று இன்று ‛இந்தியா' கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை செய்தோம். லோக்சபா தேர்தலில் வலிமையை நிரூபிப்போம். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். அவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவை அகற்றப்படுவதை தேர்தலில் உறுதி செய்வோம்'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News