ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி உள்பட 4 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி உள்பட 4 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2024-09-29 12:00 GMT

அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி.

தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டது.

இதன்படி புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களின் பதவி ஏற்பு விழா இன்று மாலை தமிழக கவர்னர் மாலையில் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். புதிய அமைச்சர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் பதினைந்து மாதங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவே வந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், சா மு நாசர் ஆகியோர் இன்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

புதிதாக அமைச்சராக பதவி ஏற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (கரூர் தொகுதி) அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டு உள்ளது.

கோவி செழியனுக்கு (திருவிடைமருதூர் தொகுதி) உயர் கல்வி துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

ராஜேந்திரனுக்கு (சேலம் வடக்கு) சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

சா.மு. நாசருக்கு (ஆவடி) சிறுபான்னைமயினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நான்கு பேரும் பதவி  ஏற்பு விழா முடிந்ததும் நேராக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.

தமிழக சட்டமன்ற அரசு தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி  ஏற்பார் என்று நேற்று இரவே கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் 4 அமைச்சர்களுடன் பதவி ஏற்கவில்லை. அவர் தனியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலாகா மாற்றம் செய்யப்பட்டவர்களும் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News