வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை கண்டித்து இந்து முன்னணி போராட்டம்

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை கண்டித்து தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-09 13:00 GMT

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளது.

வங்காள தேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் அங்கு பெரும் கலவரம் நடந்து வருகிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமராக இருந்த சேக் ஹசீனா நாட்டை விட்டு விரட்டப்பட்டு விட்டார். அவர் இந்தியாவில் தஞ்சம் அமைந்துள்ளார்.

இந்த நிலையில் வங்காள தேசத்தில் சிறுபான்மை மக்களான இந்துக்களை குறி வைத்து ராணுவம் போராட்டக்காரர்கள் தீவிரமாக தாக்கி வருகிறார்கள். இந்துக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. வீடுகள்  தீக்கிரையாகப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசும் இராணுவமும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இதனால் அங்குள்ள இந்துக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசு இந்த பிரச்சினையில் இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூழலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிழக்கு பாகிஸ்தான் ஆக இருந்த வங்கதேசத்தில் அங்குள்ள மக்களை பாகிஸ்தான் கொடுமை செய்த போது வங்க தேசத்தை காப்பாற்றி தனி நாடாக சுதந்திரமாக செயல்பட வைத்து உதவியது இந்தியா. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பல விதங்களிலும் நமது நாடு துணை நின்று வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டில் நடப்பது இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறு மாதிரி இருக்கிறது. இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாகின்றன. இந்து கவுன்சிலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்து என்பதாலேயே அவர் வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் இந்துக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீண்டும் மீண்டும் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க ஐநா சபை தலையிட வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு நீதி கோரி வரும் 11ஆம் தேதி மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்த உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மக்களும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். இதற்கிடையே பாரத நாட்டில் இது போல் ஒரு மக்கள் புரட்சி நடக்க வேண்டும் என்பது போல பிரிவினைவாத தேச கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இவர்களுடைய நோக்கம் நமது நாடு முன்னேறக்கூடாது. நமது நாட்டின் மக்கள் அமைதியாக வாழ கூடாது சண்டை சச்சரவு மிகுந்து நாடு ஒரு அமைதியின்மையை அடைந்தால் அதன் மூலம் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற கேவலமான நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். இவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News