பொதுச்செயலாளர் பதவி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2023-03-09 09:25 GMT

சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியினரும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரின் கையே ஓங்கி நிற்கிறது. உச்சநீதிமன்றம் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் ஒரு தீர்ப்பை அளித்தது. இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில்  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க , காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

கூட்டம் முடிந்த  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதித்தோம். மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பா.ஜ.க. உடனான கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து அ.தி.மு.க. எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயக்குமார் தனது பேட்டியில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக கருத்து எதுவும் கூறவில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேதி முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News