15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-14 17:39 GMT

முதல்வர் ஸ்டாலின்.

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த அந்த இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேரின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலைக் கண்டிக்கிறேன்.

பாராளுமன்றம் விவாதம் நடத்தும் அவையாக இருக்க வேண்டும். எம்.பி.க்களின் கருத்துரிமையைப் பறிப்பது புதிய பாராளுமன்ற விதிமுறையா?

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை தண்டிப்பதா? எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயல்படக் கூடாது.

எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

Similar News