ஆளுனருக்கு முதல்வர் பரிந்துரை கடிதம்: மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

ஆளுனருக்கு முதல்வர் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதால் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

Update: 2024-03-13 16:13 GMT

முன்னாள் அமைச்சர் பொன்முடி.

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் பொன்முடி. பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை கட்ந்த 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார். மேலும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1) இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக பொன்முடி இழந்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்ற நிலையில், பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. அதில், பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாகியுள்ளார் பொன்முடி.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பொன்முடி அமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை இணைத்து தனது பரிந்துரையுடன் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை காலை பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News