அதிமுகவில் அன்வர்ராஜாவுக்கு கல்தா: செயற்குழு கூடும் நிலையில் பரபரப்பு

அதிமுக செயற்குழு இன்று கூடும் நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-01 00:45 GMT

அன்வர் ராஜா

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்வர் ராஜாவுக்கு 72,  வயதாகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அதிமுகவில் உள்ளார். கடந்த வாரம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அன்வர் ராஜாவுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அன்வர் ராஜா நீக்கம் அதிமுகவில் மட்டுமின்றி, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News