கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அண்ணாமலை கோரிக்கை

கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-06-20 14:27 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவு சம்பவம் குறித்து சி.பி ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த சுமார் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  கள்ள சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்திலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ள சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது கள்ள சாராய சாவிற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சியில்  இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக  காவல்துறைக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் திமுகவிற்கும் தொடர்பு உள்ளது.  எனவே மத்திய அரசு இது பற்றி  சிபி ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

Tags:    

Similar News