அதிக சீட் தரும் கட்சியுடன் தான் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

அதிக சீட் தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுத்தும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

Update: 2024-02-07 16:42 GMT

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி ஏற்படுத்தும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. என்ற கட்சியை  தொடங்கி நடத்தி வந்தார். எம்எல்ஏவாகி தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் விஜயகாந்த் காலமானார்.

2006 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கட்சி 8.3 சதவீத ஓட்டை பெற்றது. 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்து போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து அந்த கட்சி சரிவை சந்தித்தது.

2016ல் மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு படுதோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தே.மு.தி.க. தேயத்தொடங்கியது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தே.மு.தி.க.வால் வெற்றி பெற முடியவில்லை. இத்தகைய சூழலில் தான் விஜயகாந்த் மறைந்துள்ளார். விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் வரும் நாடாளுமன்ற தேர்தல் தான். இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்க தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.

பா.ஜ.க. அல்லது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஏதேனும் ஒன்றில் தே.மு.தி.க. இணைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில்  சென்னை தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர். 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ‛‛தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் கூட்டணி அமைக்கவும் விருப்பம் தெரிவித்தனர். அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும். 2014ம் ஆண்டை போலவே 14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளோம். இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை'' என்றார்.

இந்த வேளையில் தேர்தலில் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‛‛தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது. விஜய பிரபாகரன் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நான் போட்டியிட வேண்டும். சுதீஷ் (பிரேமலதா சகோதரர்) போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் எந்த தொகுதி கிடைக்கப்போகிறது. யார் வேட்பாளர்? என்பது பற்றி நான் கூட்டணிக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்'' என்றார்.

விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் பிரேமலதாவும் கூட அவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் தேமுதிக என்பது அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தான் களமிறங்க உள்ளது. கூட்டணி எனும்போது அந்த கட்சிகள் வழங்கும் தொகுதிகளின் எண்ணிக்கை என்பது கணிசமாக குறையலாம். இதனால் விஜயபிரபாகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவாரா? இல்லையா? என்பதை நாம் அறிய இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டும்.

Tags:    

Similar News