பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி: இழுபறிக்கு முடிவு கட்டியது பா.ம.க.

பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி என பாமக அறிவித்து இருப்பதன் மூலம் இத்தனை நாள் இழுபறிக்கு முடிவு கிடைத்து உள்ளது.

Update: 2024-03-18 14:25 GMT

பிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்பு மணி ராமதாஸ்.

பாரதிய ஜனதா கட்சியுடன் தான் கூட்டணி என பா.ம.க. அறிவித்திருப்பதால் இதுவரை நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,  மதிமுக, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள் .

ஆனால் அ.தி.மு.க இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை .அதேபோல பாரதிய ஜனதா கட்சியும் இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. இதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த இரண்டு கட்சிகளும்  பா.ஜ.க. உடனும் அ.தி.மு.க.உடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலைப்பாடு அவர்களுக்கு இருந்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அ.தி.மு.க.வுடன் பாமக கூட்டணி ஏற்படுத்தும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென பா.ம.க.வின் நிலைப்பாடு வெளிப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் தான் பா.ம.க. கூட்டணி வைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நிறுவனர் ராமதாஸ் ,மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது ஒப்புதலுடன் இந்த முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால்  சேலத்தில் நாளை  நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பா.ம.க. தலைவர்கள் ஏறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News