இதுதாங்க ஜனநாயகம்: ஊராட்சித்தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று பதவி ஏற்றார்.

Update: 2021-10-20 06:00 GMT

தமிழ்நாட்டில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள்,  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோர்,  இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக,  நெல்லையை சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள், இன்று பதவி ஏற்றார். தேர்தலில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட,  90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

அவருக்கு மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக செல்வராணி 440 வாக்குகளும், அதற்கு அடுத்தவர் உமா என்பவர் 72 வாக்குகளும் பெற்றார். 90-வயது மூதாட்டியின் வெற்றி, இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

அனுபவம் பேசுகிறது: தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய பெருமாத்தாள்.

தனது வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. எனக்கு தற்போது 90 வயதாகிறது. ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வெற்றி பெற்றுள்ளனர். நான் தற்போதுதான்,  முதல்முறையாக நின்று, வெற்றி பெற்றுள்ளேன். ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News