நிர்வாகப்பணி பயன்கள் ஏழை மக்களுக்கு சேர்வதை உறுதி செய்ய வேண்டும் -குடியரசு துணைத் தலைவர்

நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு – குடியரசு துணைத் தலைவர்

Update: 2022-03-30 03:23 GMT

நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சிறந்த முறையில் பயனாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துவதை குடிமைப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாகக் கல்வி நிலையத்தின் 68-வது ஆண்டு தினத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வதேச நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று  உரையாற்றிய அவர், குடிமக்களை சார்ந்த நிர்வாகம் சிறந்த பொதுச் சேவையை அளிக்க முடியும் என்று தெரிவித்தார். பொது நிர்வாகம் வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதன் அவசியம் குறித்தும், அது குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், செழுமையான, ஒற்றுமையான, வளமான இந்தியாவைக் காணும் வகையில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் தெரிவித்தார். மாணவப் பருவத்தில் இருந்தே அவர் ஆற்றிய சேவையின் மூலம் வளர்ச்சிப் பெற்று இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக உயர்ந்தார் என்று கூறினார். வலிமையான இந்தியாவை கட்டமைப்பதில் குடிமைப் பணியாளர்களுக்கான முக்கியப் பங்கு குறித்து பாபு ராஜேந்திர பிரசாத் அறிந்திருந்தார் என்று கூறினார். உபகாரம், உண்மை, சேவை, எளிமை ஆகிய பண்புகளை கொண்ட ஒரு தொலைநோக்கு தலைவராக ராஜேந்திர பிரசாத் விளங்கினார் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 70 வருடங்களாக நம் நாட்டில் உள்ள குடிமைப் பணியாளர்கள் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் தொலைநோக்கு சிந்தனையை நிறைவேற்றும் வகையில் செயலாற்றி வருவதாக தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகளில் இந்திய பொது நிர்வாக கல்வி நிலையம் பெரும் பங்காற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். இக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைவதற்கு தாம் வாழ்த்துவதாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News