மத்திய அரசு திட்டங்கள் சென்றடைய 28 மாநிலங்களில் பிரச்சாரம்: அமைச்சர் கிரிராஜ்சிங் துவக்கினார்

தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்கள் சென்றடைவதற்கான புதிய பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்

Update: 2022-04-29 03:29 GMT

'ஆசாதி சே அந்த்யோதயா தக்' என்ற 90 நாள் பிரச்சாரத்தை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 9 மத்திய அமைச்சகங்களின் நலத் திட்டங்களை நிறைவு செய்யும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்கள், சுதந்திரப் போராட்டத்தின் போது தேசத்துக்காக மாபெரும் தியாகம் செய்த 99 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறந்த இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 17 திட்டங்களின் மூலம் விரைவான முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக உதவி செய்வதே இதன் நோக்கமாகும். இதில் பங்கேற்கும் அமைச்சகம்/துறைகள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்களை பலன்கள் சென்றடையும். வளர்ச்சி அளவுருக்களில் சற்றே பின்தங்கிய நிலையில் உள்ள 75 மாவட்டங்கள் தரவுகள் மூலம் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்  கிரிராஜ் சிங், சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார் என்றார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பிரசாரம் வெற்றியடைய 9 அமைச்சகங்களும் பொதுமக்களின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர். தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, "மக்களுக்குத் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களை நினைவுகூரவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் கிராமத்தை மேம்படுத்தவும் இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 90 நாட்களில் இலக்கை அடைவதே தியாகிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்," என்றார்.

பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர்  கபில் மோரேஷ்வர் பாட்டீல் பேசுகையில், இந்த பிரச்சாரத்தின் மூலம், அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றார். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா பேசுகையில், "இத்திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை இன்று நினைவு கூர்கிறோம்," என்றார்.

Tags:    

Similar News