மாநிலங்களவையை சிரிப்பலையில் மூழ்க வைத்த திருச்சி சிவாவின் உப்புமா கதை

நாடாளுமன்றத்தில் இன்று எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சிரிக்க வைத்ததுடன், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Update: 2023-02-08 16:45 GMT

பைல் படம்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்றை கூறினார். "ஒரு கல்லூரியின் விடுதியில் நாள்தோறும் மாணவர்களுக்கு உப்புமாவையே, விடுதி நிர்வாகம் உணவாக வழங்கி வந்தது. இதனால் சலிப்புற்ற விடுதி மாணவர்கள், விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து விடுதி மாணவர்களை, நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு உப்புமா வேண்டாம் என்றும், அதற்கு பதில் வேறு உணவு வகைகள் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டனர். இதனை தொடர்ந்து விடுதி நிர்வாகம், மாணவர்களுக்கு என்ன உணவு வேண்டும் என வாக்கெடுப்பு நடத்தியது.

அந்த வாக்கெடுப்பில், 7 சதவிகித மாணவர்கள் பிரெட் ஆம்லெட்டுக்கும், 13 சதவிகித மாணவர்கள் பூரிக்கும், 18 சதவிகித மாணவர்கள் ஆளு பரோட்டாவுக்கும், 19 சதவிகித மாணவர்கள் இட்லிக்கும், 20 சதவிகித மாணவர்கள் மசாலா தோசைக்கும் வாக்களித்தனர். மேலும் 23 சதவிகித மாணவர்கள் உப்புமாவிற்கே வாக்களித்தனர். இதனால் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற உப்புமாவே, மீண்டும் விடுதியில் வழங்கப்பட்டது.

இது போலதான் பாஜகவின் கதையும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாததால் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட்டது. ஆனால் இந்த முறை அது நடக்காது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கும்" என்று கதையை திருச்சி சிவா நிறைவு செய்தார். திருச்சி சிவாவின் இந்த கதையை கேட்ட மாநிலங்களவை சிரிப்பலையில் மிதந்தது.

Tags:    

Similar News