திருப்பதி அரசுமருத்துவமனை - அடாவடி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 6 பேர் கைது

திருப்பதி அரசு மருத்துவமனையில் இருந்து மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை:.20 ஆயிரம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

Update: 2022-04-27 08:57 GMT

திருப்பதி அரசு மருத்துவமனையில் மரணமடைந்த சிறுவனின் உடலை தந்தை 10 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற விவகாரம் ரூ.20 ஆயிரம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அடுத்த சித்வேல் சேர்ந்தவர் நரசிம்மலு. காவலாளி. இவரது மகன் 9 வயதான ஜெயசிவாவிற்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயசிவா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். இதனால் ஜெயசிவா உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நரசிம்மலு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அணுகினார்.


அப்போது அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 75 கிலோ மீட்டருக்கு உடலை கொண்டு செல்ல ரூ.20 ஆயிரம் கட்டணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நரசிம்மலு, ''கூலி வேலை செய்யும் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது'' என கூறினார். ஆனால் கட்டணம் குறைக்க இயலாது என கூறிவிட்டனர். இந்நிலையில் வேறு ஆம்புலன்ஸ் டிரைவர், நரசிம்மலு நிலையை பார்த்து ரூ.8 ஆயிரத்திற்கு அழைத்து செல்ல முன் வந்தார். ஆனால் அந்த டிரைவரை மருத்துவமனைக்குள் வந்தால் உயிருடன் இருக்க மாட்டாய் என மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் எச்சரிக்கை விடுத்து மிரட்டினார்களாம்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது மகனின் உடலை உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனையடுத்து, கலெக்டர் வெங்கட்ரமணா உத்தரவின்படி ஆர்டிஓ கனகநரசா தலைமையில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விடதல ரஜினி குண்டூரில் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ரூயா அரசு மருத்துவமனை சம்பவம் குறித்து கண்காணிப்பாளர் டாக்டர் பாரதியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சடலங்களை வைத்து வியாபாரம் செய்யும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஒழங்குமுறைப்படுத்தப்படும் .20 ஆயிரம் ரூபாய் கேட்டு அடாவடி செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News