பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு

பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்

Update: 2022-05-21 04:48 GMT

பணி ஓய்வு பெற்ற  உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ்

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகேஸ்வராவ் ஒய்வு பெறுகிறார். ஜூன் 3ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை தொடங்குவதால் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாகேஸ்வராவ். விவ‌சாய குடும்பத்தில் பிறந்த நாகேஸ்வர ராவ் பள்ளி, கல்லூரிப் படிப்பை குண்டூரிலே முடித்தார். ஆந்திரா கிறிஸ்டியன் சட்டக்கல்லூரியில் படித்தார்.

1984ம் ஆண்டு ஹைதராபாத்துக்கு சென்ற நாகேஸ்வர ராவ் ஆந்திர‌ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒய். சூரியநாராயணாவிடம் ஜூனியராக சேர்ந்தார்.6 ஆண்டுகள் அவரிடம் ஜூனியராக பணியாற்றிய நாகேஸ்வர ராவ் 1990ம் ஆண்டு முதல் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குகளில் வாதிட தொடங்கினார்.


1989 ஆம் ஆண்டு வெளியான "கனூன் அப்னா அப்னா" திரைப்படத்தில், சஞ்சய் தத் மற்றும் காதர் கான் ஆகியோருடன் ஜஸ்டிஸ் ராவ் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.

1999ம் ஆண்டு டெல்லி உச்ச நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் 2000ம் ஆண்டு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதிட்டதால் கடந்த 2003-ம் ஆண்டு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நாகேஸ்வர ராவ் இருமுறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவராக உயர்ந்த நாகேஸ்வர ராவ் ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, கலாநிதி மாறன் தரப்பிலும் ஆஜராகியுள்ளார். இதே போல ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காகவும் ஆஜராகியுள்ளார்.


கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா நாகேஸ்வர ராவை நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களினால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அவரது பரிந்துரையை நிராகரித்தது. இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டு 2016ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய 7வது நீதிபதி ஆவார்.

இந்நிலையில் ஜூன் 3ம் தேதி பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் நேற்றோடு தன் பணியை நிறைவு செய்தார். உச்சநீதிமன்றத்தின நீதிபதியாக ஓய்வுபெற உள்ள நிலையில் முறைப்படி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஒரு நாள் அமர்ந்தார். அவருக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி ஹிமா ஹோலி, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரரிவாளனை விடுதலை செய்து நாகேஸ்வராவ் அதிரடி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News