எஸ்எஸ்எல்வி-டி1 திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்களில் இருந்தும் சிக்னல் வராததால் எஸ்எஸ்எல்வி டி1 தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்

Update: 2022-08-07 12:07 GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மைக்ரோ - நானோ என்கிற 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில், முதன்முறையாக எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இதன் செலவு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் செலவுகளை விட மிக குறைவாகும். இந்த எஸ்எஸ்எல்வி - டி1 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

இது இஓஎஸ் - 2 மற்றும் ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. இதில் இ.ஓ.எஸ் - 2 செயற்கைக்கோள் 145 கிலோ எடை கொண்டது, இது பூமியை கண்காணிக்கும் பணிகளை செய்யக்கூடியது. இதேபோல் 8 கிலோ எடை உடைய ஆசாதிசாட் (AzaadiSAT) செயற்கைக்கோளானது 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளால், சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணுக்கு அனுப்பிய இரண்டு செயற்கைகோள்களில் இருந்தும் சிக்னல் வரவில்லை எனவும்,  இஓஎஸ் - 2 மற்றும் ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னலை கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து முயற்சித்தும் சிக்னலை கொண்டு வர முடியாததால் எஸ்எஸ்எல்வி டி1 தோல்வியில் முடிந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News