சமூக ஆர்வலர் கைது விவகாரம்: ஐ.நா.விடம் இந்தியா கடும் சீற்றம்..!

சமூக ஆர்வலர் கைது குறித்து கருத்து கூறி இருப்பது, இந்தியாவின் நீதித்துறையில் தலையிடுவதற்கு சமம் என ஐ.நா.,வுக்கு மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.

Update: 2022-06-29 12:13 GMT
மும்பையில் கைதான பெண் சமூக ஆர்வலர் செதல்வாட்.

குஜராத்தில் கலவரத்தில், ரயில் எரிப்பு, எம்.பி படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவங்களில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக கொலையுண்ட எம்.பி மனைவி ஜாகியா ஜாப்ரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டது.

இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதையடுத்து, ஜாகியா குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து ஜாகியா, 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஐ.நா.,வின் மனித உரிமைக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரி மேரி லாலர் கூறுகையில், செதல்வாட்டை விடுதலை செய்து கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், இதற்கு பதிலடியாக, இந்தியாவின் நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவது போல உள்ளது, இந்த கருத்து என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி குறிப்பிட்டுளார்.

Tags:    

Similar News