முதல் அமைச்சர் வீட்டை ,ஷர்மிளா முற்றுகையிட சென்றதால் பரபரப்பு

தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ் வீட்டை ,ஷர்மிளா முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-30 06:36 GMT

தெலுங்கானா முதல்வரின் வீட்டை முற்றுகையிட காரில் சென்ற ஒய்.எஸ். ஷர்மிளா.

தெலுங்கானா முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிடச் சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டு, காருடன் இழுத்துச் சென்று கைதுசெய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில்  முதலமைச்சர் ஆக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார். ஷர்மிளா தெலுங்கானா மாநிலத்தில் முதல் அமைச்சராக உள்ள  சந்திரசேகர் ராவ் அரசைக் கண்டித்து, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

வாராங்கல் பகுதியில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டி.ஆர்.எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் கார் மற்றும் வாகனங்களைத் தாக்கினர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான காருடன் ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஷர்மிளா  புறப்பட்டார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோதும், காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு வழியின்றி ஷர்மிளா அமர்ந்திருந்த காரை போலீசார்  காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். நம்பள்ளி நீதிமன்றத்தில்  அவரை ஆஜர்படுத்தினார்கள்.  நீதிபதி அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஷர்மிளா விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பாத யாத்திரைக்கான அனுமதி ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து ஷர்மிளா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, பாத யாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News