நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

Update: 2024-04-27 03:33 GMT

Electoral bonds case-சுப்ரீம் கோர்ட் (கோப்பு படம்)

டெல்லியை சேர்ந்த எழுத்தாளர் ஷிவ் கேரா, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளர்களை காட்டிலும், நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்தாளர் ஷிவ் கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.

அதைத் தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் வேறு வேட்பாளர்கள் இன்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் அங்கு மக்கள் தங்களுக்கான தலைவரை தேர்தலில் தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தேர்தல்களில் மற்ற வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவையும் ஒரு வேட்பாளராக கருதி விளம்பரப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் அந்த ரத்து செல்லாது என அறிவிக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.

அந்த தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகள் வரை எந்த தேர்தல்களில் போட்டியிடாதவாறு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல்களில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பின் குறிப்பிடத்தக்க வகையிலான மாற்றமாக இது இருக்கும், அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் நோட்டாவை ஒரு கற்பனை வேட்பாளராக கருதுவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நோட்டாவை அங்கீகரிக்கப்பட்ட கற்பனை வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அரசியல் கட்சிகள் நேர்மையான மற்றும் சிறந்த வேட்பாளர்களை தேர்தல்களில் நிறுத்த முயற்சிக்கும் என்று கூறப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், இது தேர்தல் நடைமுறை விவகாரம் என்பதல் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

ஒரு தேர்தலில் அதிகபட்ச வாக்குகளை நோட்டா பெற்றாலும் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது என்பது தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடைமுறை விதி என்பது குறிப்பிடத்தக்கது. அதை மாற்றக் கோரியே உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News