உக்ரைன்-ரஷ்யா போரால் நிலக்கரி விலை உயர்வு: இந்தியாவிற்கும் பாதிப்பு
நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் உற்பத்தி, எஃகு, சிமெண்ட் மற்றும் அலுமினிய உற்பத்தி ஆகியவற்றுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடந்த ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்னமும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் நிலக்கரி விலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மின் உற்பத்தியாளர்கள் மற்றும் எஃகு, சிமெண்ட் மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் வாங்காமல் மற்ற நாட்டில் இருந்து நிலக்கரி விநியோகம் கிடைத்தாலும், ரஷ்ய நிலக்கரி விநியோகத்தில் உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது என்பதால், வரவிருக்கும் நிதியாண்டின் முதல் காலாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை 45-55 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆம் நிதியாண்டில் 601 மெட்ரிக் டன்னில் இருந்து அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை 700 மில்லியன் டன்னாக கோல் இந்தியா உயர்த்த முடியாவிட்டால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
மார்ச் மாதம் ஆஸ்திரேலிய நிலக்கரியின் விலை டன்னுக்கு சுமார் 330 டாலர் என்ற வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி இந்திய அனல் மின் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு ஆஸ்திரேலியாவும், இந்தோனேஷியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தொடர்ந்து சந்தைகள் விநியோக இடையூறுகளை எதிர்கொள்வதால், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலைகள் முதலாம் காலாண்டில் (FY2023) 45-55% வரை உயரக்கூடும். கோல் இந்தியா லிமிடெட் நடத்திய ஸ்பாட் இ-ஏலத்திலும் உள்நாட்டு நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோல் இந்தியா நிர்ணயித்த அடிப்படை விலையை விட பிரீமியங்கள் பிப்ரவரி 2022 இல் 270 சதவீதத்தை எட்டியது. இது மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அனல் மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டது மற்றும் அக்டோபரில் நெருக்கடியின் உச்சத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ. 20 என்ற அதிக விலையில் மின்சாரத்தை எக்ஸ்சேஞ்ச்களில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதால், நிலக்கரி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறையை தவிர்க்க, 2023 நிதியாண்டில், கோல் இந்தியா உற்பத்தியை கணிசமாக ~700 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க வேண்டும்
உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறையால், மின்சாரம் சாராத எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு நிலக்கரி குறைவாக வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
நிலக்கரி விலை அதிகரிப்பின் தாக்கம் மின் நுகர்வோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலக்கரி உயர்வு காரணமாக மும்பையில் மின்கட்டணத்தை உயர்த்த டாடா பவர் மற்றும் அதானி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கோடைகாலத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது.