பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மாநிலங்களின் வருவாய் குறையாது

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு குறையாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-05-23 00:04 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நேற்று முன்தினம் பெட்ரோல், டீசலுக்கான விலையை மத்திய அரசு குறைத்தது. மேலும், மாநில அரசுகளும், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியைக் குறைக்க முன்வர வேண்டும்.கடந்த 2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்த போதும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்கள் குறைக்கவில்லை. தற்போது விலையை குறைக்க அவை முன்வர வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம், பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு, மத்திய அரசின் பொறுப்பு என்பதை மத்திய நிதி அமைச்சரே கூறியுள்ளார். அதனால், என் கருத்தை திருத்திக் கொள்கிறேன்' என, அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.


தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் உட்பட பல மாநிலத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக பல விமர்சனங்கள், கேள்விகளை பலர் முன் வைத்துள்ளனர். அவர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும், இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தெளிவாக்க விரும்புகிறேன். பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு வரிகளை விதிக்கிறது. அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி, வேளாண் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கூடுதல் வரி ஆகியவை அடங்கியதே கலால் வரி. இதில், அடிப்படை கலால் வரி வருவாய் மட்டுமே மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அதாவது அடிப்படை கலால் வரி வருவாயில், 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.கடந்த 2021 நவம்பரில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. தற்போது, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவை, முழுக்க முழுக்க சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரியில் இருந்து செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இதனால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையாது. கடந்த 2021 நவ., மற்றும் தற்போது செய்யப்பட்டுள்ள வரி குறைப்பால் ஏற்படும் மொத்த சுமையை மத்திய அரசே ஏற்கிறது. 13.9 லட்சம் கோடி ரூபாய் தற்போதைய வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதே போல், நவம்பர் 2021ல் செய்த விலை குறைப்பால், ஆண்டுக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆக மொத்தம், 2.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது. பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி மூலம் கிடைக்கும் நிதி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுகிறது. பாஜக அரசு அமைந்த பின், 2014ல் இருந்து, 2022 வரை, 90.9 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News