ராகுல் காந்தியை தலைவராக்க ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம்

ராகுல் காந்தியை தலைவராக்க ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-18 11:30 GMT

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கூட்டம் அசோக்கெலாட் தலைமையில் நடைபெற்றது.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார். இதை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த அந்த கட்சியின் பல தலைவர்கள் விலகினார்கள். கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.


இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் டெல்லியில் இருந்ததால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தியை தலைவராக்கும் தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது. மற்ற மாநில காங்கிரஸ் குழுக்கள் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News