தினமும் 3 மணி நேரம் பவர் கட்: அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு

அடுத்த சில நாட்களுக்கு, தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று, பஞ்சாப் அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-11 08:00 GMT

நாட்டில் உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறை நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில், நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எந்த மாநிலத்திலும் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தார்.

ஆனால், பல மாநிலங்கள் தங்களுடைய நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக,  மின் தடையை அறிவிப்பது பற்றி பரிசீலிசித்து வந்தன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்குள்ள பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், தினசரி 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படும் என்று, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது, அடுத்த சில நாட்களுக்கு, இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அம்மாநில மக்களை கவலை அடையச் செய்துள்ளது. பஞ்சாப் போல, தமிழகத்திலும் மின் தடை வருமோ என்று, இங்குள்ளவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News