ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க பரிந்துரை

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்குமாறு மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

Update: 2022-08-11 03:29 GMT

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ரயில்வேக்கு செலவானது. ஆனால் கொரோனா தொற்றால் ரயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு மறுத்து உள்ளது.

தற்போதைய நிலையில் 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மீதமுள்ள சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை விரிவாக ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை அறிவுறுத்தி இருக்கிறது.

Full View

மேலும், கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புகளில் இருந்து ரயில்வே தற்போது மீண்டு வரும் நிலையில், பல்வேறு வகையான பயணிகளுக்கான நியாயமான கட்டண சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

மூத்த குடிமக்களுக்கு கிடைத்த சலுகைகள் குறைந்தபட்சம் படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏ.சி. பயணிகளுக்காவது வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள இந்த குழு, இதன் மூலம பாதிக்கப்படக்கூடிய மற்றும் உண்மையிலேயே தேவைப்படும் மூத்த குடிமக்கள் மேற்படி வசதியைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. 

Tags:    

Similar News