நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி, அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Update: 2022-01-31 02:45 GMT

கோப்பு படம் 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை, 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வரும் 2 ஆம் தேதி விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்கு பிரதமர் மோடி 7ஆம் தேதி பதிலளிக்க உள்ளார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, வரும் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடக்கிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக பெகாசஸ் மென்பொருள் மூலம் போன் ஒட்டுகேட்பு, சீன ஊடுருவல் உள்ளிட்டவற்றை கிளப்பி அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tags:    

Similar News