ஒடிசா ரயில் விபத்து: சிகிச்சை, மீட்புப்பணிகளில் இந்திய ராணுவம்

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Update: 2023-06-03 05:47 GMT

ஒடிசா ரயில் விபத்து 

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்த இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உதவ இந்திய ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. கிழக்கு காமாண்டிலிருந்து ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ மற்றும் பொறியியல் குழுக்கள் பல தளங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ரயில்வே கூறுகையில், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும், பாலசோரில் ஒரு சரக்கு ரயிலும் மோதிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 238 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 650 பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பளம் போல் நொறுங்கிக் கிடக்கும் பெட்டிக்குள் நுழைந்து சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்றும், அரசு உயர்மட்ட விசாரணையை அமைக்கும். இதுகுறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். மேலும் ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வார்.

இது ஒரு பெரிய சோகமான விபத்து. ரயில்வே, என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் மாநில அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News