கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு

கொச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

Update: 2023-01-24 06:37 GMT

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது.

இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வைரஸ் பரவலைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. அறிகுறிகள் தென்படுபவர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்

நோரோவைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது?

நோரோவைரஸ் என்பது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஒரு தொற்று வைரஸ் ஆகும். குறைவான பொதுவான அறிகுறிகளில் குறைந்த தர காய்ச்சல் அல்லது குளிர், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை அடங்கும். இந்த வைரஸ் பொதுவாக ஆரோக்கியமான மக்களைப் பாதிக்காது, ஆனால் இது சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

நோய் பாதித்தவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் நிறைய சுடுதண்ணீர் மற்றும் ORS (வாய் ரீஹைட்ரேஷன் உப்புகள்) உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் சேவையை நாட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் வெளியே செல்ல வேண்டும், ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் வைரஸ் பரவக்கூடும்.

Tags:    

Similar News