மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்: மும்பையில் 144 தடை உத்தரவு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-25 12:10 GMT

ஏக்நாத் ஷிண்டே வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் சிவசேனா தனி விமானம் மூலம் அஸ்ஸாம் அழைத்துச் சென்று, கௌஹாத்தியில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளது.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஞ்சியதாக தெரியவில்லை. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் மும்பையிலும் 144- தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை போலீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் ஏக்னாத் ஷிண்டே இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News