காணாமல் போன 10,20,50 ரூபாய் நோட்டுகள்: நிதியமைச்சருக்கு காங்கிரஸ் கடிதம்

10,20,50 ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டதாக மத்திய நிதியமைச்சருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2024-09-22 12:00 GMT

10, 20, 50 ரூபாய் நோட்டுகள் சந்தையில் இருந்து காணாமல் போகின்றன, ரிசர்வ் வங்கி அச்சிடுவதை நிறுத்திவிட்டதா? என மத்திய நிதி அமைச்சருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய சந்தையில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புற மக்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என  மக்களவை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு எழுதி உள்ளார்.

மாணிக்கம் தாகூர் எம்பி எழுதி கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சிறிய நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. யுபிஐ மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அரசு ஊக்குவிப்பது புரிகிறது, ஆனால் சிறிய நோட்டுகளை தடை செய்வது சரியல்ல. இதனால் தினமும் நோட்டுகள் மூலம் சிறு தொகை செலுத்தும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யாத மக்களும், கிராமப்புற மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே சிறிய நோட்டுகள் அச்சிடுவதை மீண்டும் தொடங்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நோட்டுகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 10,  20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை மீண்டும் தொடங்க உத்தரவிடவேண்டும். 

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில்  குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News